Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணம் பெற்றால் கட்சியிலிருந்து  நீக்கப்படுவர்

டிசம்பர் 19, 2020 11:17

சென்னை: மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3-ந் தேதி உறுதிப்படுத்தினார். இதையடுத்து ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும்” என்று கூறியிருந்தார்.

தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார். அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் தற்போது ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் தனது கட்சிக்கு ‘பாபா முத்திரை’ சின்னத்தை அவர் கேட்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ல் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்  ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.  பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்.  மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். 

ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது,போன்ற அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  ரஜினி கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்